கிறிஸ்து பிறப்பு
பக்தன் ஒருவன் கடற்கரை வழியாக நடந்துச்செல்கின்றான். திருடர்கள் அவனை தாக்கிவி;ட்டு அவனிடமுள்ள பணத்தை சூறையாடிவிட்டு செல்கின்றனர். பக்தன் பதருகின்றான். நான் வணங்கும் கடவுள் என்னை கைவிட்டு விட்டாரே என்று அழுதுப்புலம்புகின்றான். குரல் ஒன்று கேட்டது. உன்பின்னே என்ன பார்க்கின்றாய்? பக்தன் சொன்னான் என்னுடைய இரண்டு கால்தடங்கள். கடவுள் சொன்னார், 'அவை உன்னுடையவை அல்ல உன்னை தூக்கிக்கொண்டு செல்லும் என்னுடையவை'. அன்றிலிருந்தே அந்த பக்தன் உணர்ந்தான் நான் வணங்கும் கடவுள் என்னைவிட்டு பிரிவதுமில்லை என்னை கைவிடுவதுமில்லை.
'வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடிக்கொண்டார்' என்னும் கடவுளின் உடனிருப்பின் நற்செய்தி இன்று நம்மையும் பிறரோடு உடனிருக்க உறவாட அழைக்கின்றது. நம் இல்லங்களில், நம் இதயங்களில் பிறந்திருக்கும் இறைவன் கல்லான இதயத்தை எடுத்து விட்டு சதையாலான இதயத்தை அருளுகின்றார். நம்மோடு நம் துன்பங்களில் பங்குப்பெறுகின்றார். நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றார். இந்த மாற்றம் நம்மை நம் குழந்தைகளோடு உறவினர்களோடு உடனிருக்க அழைக்கின்றது. அவர்களின் மகிழ்ச்சியில் வேதனையில் பங்குக்கொள்ள அழைக்கின்றது.
குடும்பத்தோடு உடனிருந்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்குக்கொள்ளாமல் குடித்துவிட்டு சுற்றுகின்றப்போது கிறிஸ்துப் பிறப்பு அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடுகின்றது.
நம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கிறிஸ்துப் பிறப்பு கொண்டாட சில பிரச்சினையினால் துன்பப்பட்டுக்கிடக்கும் போது அவர்களுடம் உடனிருந்து அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்து அவர்களையும் மகிழ்சியில் பங்குப்பெறச் செய்யும் போது கிறிஸ்துப் பிறப்பு அர்த்தமடைகின்றது.
வெளி ஊர்களிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் பிள்ளைகள் பெற்றோரோடு இருந்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்குக்கொள்ளும் போது, கணவன்கள் மனைவி, குழந்தைகளோடு உடனிருக்கும் போது கிறிஸ்துப்பிறப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகின்றது.
எனவே கிறிஸ்துப் பிறப்பு என்பது உறவின் நாள் உடனிருப்பின் நாள். இந்த உடனிருப்பை உறவை நாமும் ஒருவர் மற்றவருக்கு வழங்கி கிறிஸ்துப் பிறப்பினை மிக மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துப் பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்....