அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

கடின உழைப்பிற்கு...தசரத் மான்ஜி

கடின உழைப்பிற்கு...

பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் கடைநிலை சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். 1959 ஆம் ஆண்டில் தன் 24 ஆம் வயதில் ஒரு நாள்  அவரது அன்பு மனைவி வீட்டிற்கு அருகில் இருந்த மலையின் மறுபுறமிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது தவறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் தசரத் மான்ஜி. இனிமேல் இதேபோன்ற ஒரு அவல நிலை எந்த மனிதனுக்கும் வரக்கூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்தார்.இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை உண்டுபண்ணுவதே தன் இலட்சியம் எனக் கொண்டார். இதனால் தன் கிராம மக்களுக்கு உதவி செய்யமுடியும் என்று உணர்ந்தார். அவருடைய எண்ணம் எல்லாம் மலையைச் சுற்றியே வட்டமிட்டது. மலையின் குறுக்கே பாதை என்பதுதான் அவருடைய உயிர் மூச்சாக இருந்தது. 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அவரது இலட்சியக் கனல் ஓயவில்லை. 'மலையை உடைக்கப்போகின்றேன்' என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை வரலாறு படைக்கப்போகின்ற மனிதன் என்று யாரும் போற்றவில்லை. மாறாக பைத்தியக்காரன் என்றுதான் பழித்தார்கள். இயலாமையை கண்முன் கொண்;டுவந்தார்கள் மக்கள். பாதையைக் கண் முன் வைத்தார் தசரத். 22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி அந்த பறைக்குள் இருந்த பாதையை வடித்தார் தசரத் என்ற சிற்பி.  அன்று 50 கி.மீ தூரம் மலையைச் சுற்றிக் கொண்டு வந்த 60 கிராமத்தை சார்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில்  நகரத்தை அடைகின்றனர்.

SMART திறனாய்வு

உளவியல் அறிஞர்கள் SMART திறனாய்வு மூலமாக நமக்கு விளக்கிக் கூறுவர். இதனையே நாம் இங்குத் தெளிவாக நோக்குவோம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருதுவாக்கு

1. - S = Specific அறுதியிட்டு குறிப்பிடக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு மைய புள்ளியை நோக்கியதாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக 'நான் மேல்படிப்பு படிக்க வேண்டும்' என்று தீர்மானித்தேனென்றால் அது மிகவும் மேலோட்டமாக இருக்கின்றது. நான் என்ன பாடத்தில் மேல் படிப்பு படிக்க விரும்புகின்றேன் என்று அறுதியிட்டுக் குறிப்பிடவில்லை. எனவே குழப்பம் நீடிக்க வாய்ப்பு இருக்கின்றது.

2.  M = Measurable - அளவீட்டுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், உங்கள் இலக்கினுடைய ஆழத்தையும் அகலத்தையும் அதன் அளவையும் சரியாகத் தீர்மானிக்க வேண்டும். அப்படி தீர்மானிக்காத விருது வாக்கு ஆழம் தெரியாமல் காலைப் போட்டதற்கு ஒப்பாகும்.

3. A = Attainable (Achievable) - மனித சக்தியால், குறிப்பாக உங்களால் இயலக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும், 'சூரியனைச் சிறைபிடிப்பேன்' என்பன போன்ற தண்ணீரில் எழுதுகின்ற விருது வாக்குகள் வெற்றிபெற்றுத் தரமுடியாது.

4. R = Realistic (Relevant) - உண்மைத்தன்மையுள்ளதாய், தொடர்புடையதாய், நம்பகதன்மையுள்ளதாய் இருக்க வேண்டும். ஒரு இலக்கை அடைவதற்கு என்னென்ன வாய்ப்புகளும் ஆதாரங்களும் கைவசம் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே விருது வாக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவன் காய்கறி வியாபாரம் செய்து வாழ்வின் நிறைவை அடைய தீர்மானித்தான் என்றால் காய்கறிகளைக் கொள்முதல் செய்வதற்கான பொருளாதாரம், அதனை வைத்து விற்பனை செய்வதற்குத் தேவைப்படுகின்ற இட வசதிகள் போன்றவை அவனிடம் இருக்கின்றதா என்பதைப் பொறுத்தே அவனுடைய வெற்றி அமையும்.

5. T = Time bound -  என்னுடைய இலக்கை அடைய நான் எடுத்துக்கொள்ளும் காலவரையறையினை குறிக்கின்றது. ஒரு செயலை செய்யப் போகின்றேன் என்றால் என்றைக்கு அல்லது எத்தனை மணிக்கு நான் அந்த வேலையைத் தொடங்க அல்லது முடிக்க தீர்மானித்திருக்கின்றேன் என்பதை இது குறிக்கின்றது. எடுத்துக்காட்டாக 'நான் காலையிலேயே எழும்பி உடற்பயிற்சி செய்வேன்' என்ற விருது வாக்கை எடுத்திருப்பேன் என்றால் அதிலிருந்து எளிதாக நான் அடிபிறழ வாய்ப்புள்ளது. காரணம் காலை என்று குறிப்பிட்டேனே தவிர சரியாக கால அளவை நான் குறிப்பிடவில்லை. எனவே 'நான் தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை உடற்பயிற்சி செய்வேன்' என்று தீர்மானிப்பதே காலவரையறைக்கான இலக்கணமாகும்.

அவமானங்களை ஆயுதமாக்கு!

அவமானங்களை ஆயுதமாக்கு!
 
லண்டன் நகரில் வாழ்ந்துவந்த ஹென்னா என்பவர் மது மற்றும் கேளிக்கை விடுதி ஒன்றில் பாடல் பாடி நடனம் ஆடுபவராக இருந்தார். கணவனின் பொறுப்பற்ற தன்மையினால் குடும்பம் சீர்குலைந்திருந்தது. ஒரு நாள் கேளிக்கை விடுதியில் ஹென்னா பாடிக்கொண்டிருக்கும் போது அவளுடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சினையினால் பாடல் கேலிகூத்தாகியது. எல்லோரும் சிரித்தார்கள். ஹென்னா அவமானத்தால் அழுதாள். ஒரே கூச்சல், குழப்பம். ஹென்னா அவமானத்தால் மேடையிலிருந்து இறங்க அவருடைய ஆறு வயது மகன் மேடை ஏறினான். தன் இளம் குரலினால் பாடி, பிஞ்சு கால்களினால் ஆடி அங்கு இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான். இவனுடைய கேளிக்கை விருந்தை அனைவரும் ரசித்தனர். கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது. சில்லரை காசுகளை அவன் மேல் வீசி எறிந்தனர். சில்லரையை வேகமாகப் பொறுக்கினான் அந்தச் சிறுவன். எல்லோரும் அவனைப் பாட வற்புறுத்தினர். 'ஒரே நேரத்தில் இரண்டு வேலையைச் செய்யமுடியாது' என்று கூறி அனைவரையும் நகைச்சுவையில் ஆழ்த்தினான். இதுவே உலகம் போற்றும் ஒரு மாமனிதனின் முதல் கருவறை. இந்தச் சிறுவன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் வயிற்றில் கருவானான். இன்று தன் தாய் பட்ட அவமானத்தால் உருவானான்;. அவமானங்கள் நம்மை அழுத்தி, நம் வாழ்வையே சூனியமாக்கும் என்பதை உணர்ந்து அவமானத்தையும் ஆயுதமாக மாற்றிய இவன்தான் இன்று உலகம் போற்றும் அழியா நகைச்சுவை வேந்தன் சார்லி சாப்ளின்.

11 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தற்கொலை விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 15 முதல் 25 மடங்கு அதிகரித்துள்ளது. தேர்வில் தோற்றுப்போய்வி;ட்டால், தான் கேட்டதைப் பெற்றோர்கள் வாங்கித்தரவில்லை என்றால், தான் ஒருதலையாக விரும்பிய பெண் தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பெற்றோர் அல்லது ஆசிரியர் திட்டிவிட்டால் இள வயதுடைய மாணவர்கள் எளிதாக அவமானப்பட்டவர்களாய் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தச் செய்திகளை அன்றாட செய்தித்தாள்கள் நமக்கு சுமந்து வருகின்றன. மொத்தத்தில் வலியையோ, தோல்வியையோ தாங்கிக்கொள்வதற்கும் அதனைக் கடந்து வருவதற்கும் நம் மாணவர்கள் தங்களை தயாரித்துக்கொள்ளவில்லை.

தற்கொலை எண்ணங்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1.    தன்னம்பிக்கையின்மை
2.    மன அழுத்தம்

தன்னம்பிக்கை இல்லாத மாணவர்கள் எளிதாகத் தற்கொலை செய்துகொள்கின்றனர். தன்னம்பிக்கையின்மை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக அமைகின்றது. தன்னைப் பற்றி தனக்கே ஒரு நல்ல பார்வை இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. தன்னம்பிக்கையில் வளருகின்ற மனிதர்கள் அவமானங்களை கூட ஆயுதங்களாக பயன்படுத்தி வளரமுடியாத சூழ்நிலையில் கூட வாழ்ந்துகாட்டிவிடுகின்றனர்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் மனஅழுத்தத்தின் உச்சிக்குச் செல்வதால் அவர்களால் நிதானமாச் சிந்திக்கமுடியாமல் போய்விடுகின்றது. ஒரு நிமிட வேதனைக்காகப் பல ஆண்டு வாழ்க்கையை மாய்த்துக்கொள்கின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடு;பட நண்பர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ தங்கள் உள்ளுணர்வுகளைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் குறைய குறைய தற்கொலை எண்ணம் குறைகின்றது.

தன்னம்பிக்கையே வாழ்க்கை. தன்னம்பிக்கையை இழப்பது என்பது பறந்தால் மட்டுமே வாழ்வு என்றிருக்கும் பறவை தன் சிறகுகளை இழப்பது போன்றது. அவமானங்களே ஒருவனை செதுக்குகின்றது எனில் அந்த அவமானங்களைக் கண்டு கலங்கவேண்டாம்.