அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

சாலையோர இம்சை...Street Light

சாலையோர விளக்கு...

அது ஒரு மாலை நேரம். சாலையோரம் பேருந்து நிறுத்தில் நின்றுக்கொண்டிருந்தேன். மக்கள் தங்கள் அலுவலக வேலை முடித்தும், மாணவர்கள் பள்ளி கல்லூரி முடித்துக்கொண்டு வீடு செல்ல பேருந்துக்காக காத்துக்கிடந்தனர்.

சாலையோர தேனீர் கடையில் கூட்டம் அலைமோதியது. தேனீர் குவளையை கையில் அழகாக பிடித்தப்படி உதட்டோரமாக குடிக்கும் முறையே ஒரு பெருமிதம் தரும்.

நானும் தேனீர் சுவைத்தப்படி ரீங்கரிக்கும் தேனீயாக கண்பார்வையை மக்கள் நோக்கி கூர்மைப்படுத்தினேன்.

பிச்சை எடுக்கும் பெண் ஒருத்தி தன் கைக் குழந்தையோடு சாலையோரம் பேருந்துக்காய் நின்றுக் கொண்டிருப்பவர்களிடம் தன் கையை நீட்டி பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

பிச்சை கேட்பவரிடம் சில பேர் தலையை அசைத்து இல்லை என்றார்கள். சிலர் நின்றுக்கொண்டிருந்த இடத்தை விட்டு வேறு இடம் நகர்ந்தனர். சிலர் மௌனமாய் கண்டுக்காதவர் போல் நின்றனர். சிலர் திட்டி தீர்த்தனர். சிலர் சில்லரைக்காய் மேல் கீழ் சட்டை பையை ஆராய்ந்தனர்.

இக்காட்சிகளை கூர்ந்து பார்ப்பதிலும் மக்களின் முக, உடல், மன பாவனைகளை, அசைவுகளை கவனிப்பதே என்னைப் போன்ற சிலரின் புத்தியாக இருந்தது.

'சகோதரா! வடை கேட்டிருந்தீர்களே. இதோ வடை சூடா இருக்கிறது' என்று சூம்பி போன இடது கையை கொண்ட அந்த இளைஞன் முக மகிழ்சியோடு தன் தன்னம்பிக்கையை நீட்டினான்.

உண்மையான ஏழைகள் சாலையில் பிச்சை எடுப்பவர்கள் அல்ல சாலையோரத்தில் சிறுத் தொழில் செய்து தங்கள் வயிற்றை நிறப்பிக்கொள்பவர்களே.

ஏழைகளின் மேல் அக்கறை கொண்டவர்கள் பிச்சை கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்கள் அல்ல. சாலையோர வியபாரிகளிடம் பொருட்களை வாங்கிக்கொள்பவர்களே.


கவலைப் படாதே சகோதரா... 'இதுவும் கடந்து போகும்', let go

கவலைப் படாதே சகோதரா...
'இதுவும் கடந்து போகும்'


கவலை என்ற சிறு கல்லை நம் கண்ணுக்கு முன்பாக வைத்து பார்க்கும் போது அந்த சின்ன கல் கூட பெரிய பாராங்கல்லாக இருந்து நம் பார்வையை அது மறைத்து விடுகின்றது. இதனால் எதிரில் இருக்கின்ற வாய்ப்புகள் கூட நம் கண்ணுக்கு தெரிவதில்லை.

வாழ்கையில் மிகவும் செல்வ செழிப்போடு வாழ்ந்த மனிதர் ஒருவர் செல்வமெல்லாம் இருந்த பிறகும்  கவலையோடு காட்சியளித்தார்.

செல்வத்தனின் பக்கத்து வீட்டிலேயே ஓர் ஏழை மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான். இதனை பார்த்த செல்வந்தனுக்கு எப்படியாவது மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இரகசியத்தை அந்த ஏழை மனிதனிடமிருந்து பெற்று விட வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஏழையின் வீட்டிற்குச் சென்ற செல்வந்தன் அந்த ஏழையிடம் 'நீ மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இரகசியம் என்ன?' என்று கேட்டான்.

ஏனழ மனிதன் தனது வீட்டின்; கூரையில் வைத்திருந்த காகித சுருளை செல்வந்தனிடம் நீட்டினான். 'நீ எப்போது கவலையின் விழும்பில், துன்பத்தின் நிழலில் இருக்கின்றாயோ அப்போது இந்த காகித சுருளை பிரித்து பார்' என்றான்.

அந்த செல்வந்தன் அந்த காகித சுளுளை பத்திரமாக பாதுகாத்து வந்தான். ஒருமுறை அவன் தன் செல்வத்தை எல்லாம் இழந்து கவலையில் ஆழ்ந்தப் போது அந்த காகித சுழுளியே இவ்வாறாக எழுதியிருந்தது.

'இதுவும் கடந்து போகும்'.

காலம் உருண்டோடியப்போது செல்வந்தனுடைய கவலையும் மறைந்திருந்தது. செல்வந்தன் இழந்துப் போன செல்வத்தையெல்லாம் மீண்டும் சேர்த்து மகிழ்ச்சியின் விழும்பில் நின்றுக்கொண்டிருந்தான்.

அப்போது அவன் காலில் ஒரு காகித சுளுள் தட்டுப்படுவதை பார்த்தான். அதனை எடுத்து விரித்து வாசித்தப் போது இவ்வாறு எழுதியிருந்தது.

'இதுவும் கடந்து போகும்'.

சமயம் என்னும் சகதியில்...Religion and Reason

சமயம் என்னும் சகதியில்...

சமயம் என்றால் சமைத்தல் அல்லது பண்படுத்துதல் என்பது பொருள். மனிதனை பண்படுத்தி புது மனிதனாக பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் ஆகும்.

மனிதனை நெறிப்படுத்தாது மனிதனை மடையனாகவும் மத வெறியனாகவும் மாற்றும் சமயம் சமயம் ஆகாது.

இன்று சமயத்தின் பெயரால் பண்படுத்துதலைவிட புண்படுத்துதலே அதிகளவில் அரங்கேறுகின்றன.


கலவரங்களும், கொலைகளும், கோயில் இடிப்புகளும், கலாச்சார சீரழிவுகளும் சமயத்தின் பேயராலேயே நிகழ்கின்றன.

இச்சூழலில் சமயம் என்னும் சகதியில் உழல்வதை விட சமயத்தினை மறு வாசிப்பு செய்து அதனையே விடுதலையின் ஆயிதமாக்கிட வேண்டும்.


நம் கடவுள் ஆதிக்கபோக்கின் கடவுள் அல்ல விடுதலையின் கடவுள்.
நம் கடவுள் வன்முறையின் கடவுள் அல்ல வாழ்வுமுறையின் கடவுள்.
நம் கடவுள் அடிமைதனத்தின் கடவுள் அல்ல ஏழைகளின் கடவுள்.

சமயம் நம்மை விடுவிக்கட்டும் நம்மை அடிமையாக்க வேண்டாம்.
சமயம் நம்மை தூண்டியெழுப்பட்டும் நம்மை தூங்கச்செய்ய வேண்டும்.
சமயம் நம்மை சமைக்கட்டும் நம்மை சகதியாக்க வேண்டாம்.

ஊடக உலகில் உண்மை ஊமையானால்...Media and Message

ஊடக உலகில் உண்மை ஊமையானால்...

இன்று உண்மையை உரைக்க கூறக்கூடிய ஊடகங்கள் கட்சி முலாம் பூசப்பட்டு கட்சிகளின் பூதக்கண்ணாடிகளாக காட்சி தருவதோடு தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்துகின்றன.

ஜெயா தொலைக்காட்சியில் உண்மை என்று சொல்லப்படுவது கலைஞர் தொலைக்காட்சியில் பொய் என்று வாதிடப்படுகின்றது. தனக்கு சார்புள்ள, தன்னை பாதிக்காத செய்திகளை தருவதில் தான் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன.

மெகா தொடர்கள் என்றப் பெயரில் விபச்சார கலாச்சாரத்தையே தமிழக ஒட்டு மொத்த கலாச்சாரம் என்று மிகைப்படுத்தி காட்டுகின்றன.

ஊடகங்களுக்கிடையேயான போட்டியின் காரணமாக விபாபார நோக்கில் விளம்பர வருமானத்தையுமே முன்னிருத்தி நிகழ்சிகள் தயாரிக்கப்படுகின்றன.

மக்கள் ஊடகங்களான கிராமிய கலைகள் மழுங்கடிக்கப்பட்டு நுணி நாக்கின் ஆங்கிலமே ஊடக மொழியாக பயன்படுத்தப்படுகினறன.

ஊடகத்தின் ஊமை தன்மையை அகற்றுவோம் ! உண்மை உரைக்கும் ஊடகம் காண உழைப்போம் !


தோள்துண்டு அரசியல், Fake Politics and Fraud Principles

தோள்துண்டு அரசியல்

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்க வேண்டும். கொள்கையில்லா அரசியல் கொத்தடிமை அரசியல், பச்சோந்தி அரசியல் என்று தான் சொல்ல வேண்டும்.

சுயமரியாதை பேசிய கட்சிகள் இன்று சுயநலத்தை மட்டுமே கொள்கையாகவும் குடும்பத்தை மட்டுமே வேட்பாளராகவும் கொண்டிருக்கின்றன.

போன தேர்தலின் போது அடிப்பிடி, வெட்டுக்குத்து சண்டை போட்டுக்கொண்ட கட்சிதலைவர்கள் இந்த தேர்தலின் போது கைகுலுக்கி, கட்டிப்பிடித்து புகைப்படத்திற்கு சிரித்தப்படியே காட்சியளிப்பது கொள்கையற்ற அரசியலின் ஒட்டுமொத்த கோர முகமாக இருக்கின்றது.

தோள்துண்டின் நிறத்தினை மாற்றிக்கொள்ளமல் இருப்பதையே தனது கொள்கையாக கொண்டிருக்கின்ற அரசியல் தலைவர்கள் தன் தோலின் நிறத்தை திரும்ப திரும்ப மாற்றி கொண்டிருப்பது அவர்களின் பச்சோந்தி தனத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

பச்சோந்திகளை அடையாளப்படுத்துங்கள் ! பச்சை தமிழனாய் வாழ்ந்திடுங்கள் !

வலையை ஆழத்தில் போடுங்கள்

வலையை ஆழத்தில் போடுங்கள்

ஊடகத்தின் வளர்ச்சியும் எழுச்சியும் கட்டுக்கடங்காத விதத்தில் போய் கொண்டிருக்கின்றது. ஊடகத்தினை கூர்மைப் படுத்தும் போது இலக்கினை எளிதாக அடையமுடிகின்றது.

இணையத்தினை சரியாக பயன்படுத்தும் போது ஒரு சமூக மாற்றமே நடைபெறக்கூடும் என்பதை தான் எகிப்து, ஏமன், பகரின் போன்ற ஏகாதிபத்திய அரசிற்கு எதிரான போராட்டமும் புரட்சியும்  நமக்கு எடுத்தியம்புகின்றது.

புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கவும், புரட்சி சிந்தனைகளை விதைக்கவும் வலைத்தளங்கள் இன்று பெரும் பங்காற்றுகின்றன. மேடை போட்டு அரசியல் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்து கூட்டம் கூட்டிய காலம் இன்று கடந்து விட்டது.

புறா காலில் செய்தி கட்டி தூது அனுப்பிய காலம் போய் இன்று குருவி (Twitter) விடும் தூது தான் சந்து பொந்திலிருக்கும்  மக்களையெல்லாம் சென்றடைகின்றது.

டிவிட்டர் (Twitter), பேஸ்புக் (Facebook), பிளாக் (Blog) போன்ற வலைத்தளங்கள் இன்று சமூக மாற்ற காரணிகளாக திகழ்கின்றன. சீனாவின் ஏகாதிபத்தியம் இதுப்போன்று கேள்விக் குள்ளாக்கப்படக் கூடாது என்பதற்காக சீன அரசு சில குறிப்பிட்ட வலைத்தளங்களை தடைசெய்ததை நாம் அறிவோம்.

வலைகளை இன்னும் ஆழத்தில் போடுங்கள் ! புரட்சி அரும்பட்டும் ! புதிய பாரதம் பூக்கட்டும் !

விடிந்தப் பிறகும் தூக்கம் ஏன்? The Dawn and the Slumber


விடிந்தப் பிறகும் தூக்கம் ஏன்?

 'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு', என்று பாடினான் பாரதி. வாணிபம் சார்பாக வெளி நாடுகளுக்கு சென்று வருவது நம் தமிழ் பாரம்பரியத்திற்கு ஒன்றும் புதிதல்ல. வெளி நாட்டையும் அவர்களின் கலாச்சாரத்தையும் கேலி கிண்டல் செய்வதற்கு பதிலாக வெளி உலகில் இருக்கின்ற தரமான இலக்கியங்களை, பழக்க வழக்கங்களை ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்த்து நம் கலாச்சார சூழலுக்கு ஏற்ற விதத்தில் மறு வாசிப்பு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வெளி நாட்டின் இலக்கிய வளங்களை, வாழ்க்கை முறைகளை திறனாய்வு கண்ணோட்டத்தோடு பார்ப்பதை விட்டு விட்டு வெளி நாட்டு கலாச்சாரத்தினை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது அடி முட்டாள் தனமாகும்.

இந்தியா ஒரு வெப்ப நாடு என்பது யாவரும் அறிந்ததே. இந்த எரியும் வெப்பத்தில் கூட குளிர் கால வெளிநாட்டு ஆடைகளை (Over Coat, shoes, Jeans) நாகரிகத்தின் மொத்த அடையாளங்களாக ஏற்றுக்கொள்வது என்பது அடி முட்டாள் தனம் தானே.

இதேப் போன்று உணவு வகை தொடங்கி உறவு முறை வரை அன்னிய கலாச்சாரம் நம் அண்மையிலேயே வீடுக்கட்டி உல்லாசமாய் படுத்துக்கிடக்கின்றது. நாம் இந்த வீட்டின் வெளியே நிர்வாணமாய் விடிந்தப்பிறகும் தூங்கிக் கிடக்கின்றோம்.

பொழுது விடிந்து விட்டது. நாம் விழித்திருக்கப் போவது எப்போது?


குளிக்கலாம் வாங்க...Shower Bath

குளிக்கலாம் வாங்க...

அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. 'குடை வைத்திருந்ததால்  தப்பினேன். இல்லை என்றால் முதல் நாளே அலுவகத்திற்கு நனைந்து கொண்டுப் போயிருப்பேன்'.

'அதோ காரில் வேகமாக ஒருவன் வருகின்றான். இன்று அவ்வளவு தான். குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலையில் செல்லும் இவன் என்மேல் சகதியை வாரி இறைக்கபோகின்றான். என் துணி யெல்லாம் கறைப்படியப் போகின்றது'.

'அப்பாடா! நல்ல வேளை அவன் மெதுவாக சென்றதால் தப்பித்தேன்'. 'இவ்வளவு நேரம் ஆனப்பிறகும் பஸ்சு இன்னும் வரவில்லையே'! 'என்றைக்கு சரியான நேரத்தில் வந்தது'?

'அடை மழை விட்டப்பாடு இல்லை. நல்ல வேளை மழையில நனையாம நிற்கிறேன்'.

'அதோ பஸ்சு ஒன்று வருகிறது'.

பஸ்சுக்குள் வேகமாக சென்று ஏறினான். தன் குடையை சுருக்கி வைத்தான். நல்ல வேளை தப்பினோம் என்று நினைத்துக்கொண்டு பெருமூச்சி விட்டான்.

சென்றடைய வேண்டிய இடம் வந்ததும் அவன் முழுமையாக நனைந்திருந்ததால் குடை விரிக்க மனமில்லாமலே நனைந்துக்கொண்டே அலுவலகம் சென்றான்.

அடை மழையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பஸ்சில் ஏரிய அவனுக்கு பஸ்சில் ஏமாற்றமே மிஞ்சியது.

பஸ்சின் மேற்கூரை இத்து திருப்பிடித்து இருந்தது. பொத்தல்கள் ஓட்டைகள் என்று அனைத்தும் அவனுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

அரசு நிர்வாகங்களில் ஓட்டை ஒட்டடை இருக்கும் வரை அரசு பேருந்துக்களுக்கு என்ன விதிவிலக்கு.

அன்புச் செய்கின்றாயா அதை செயலில் காட்டு...Love and my children

அன்புச் செய்கின்றாயா அதை செயலில் காட்டு...

 குடித்துவிட்டு ஆட்டம் போடும் தங்கள் தந்தையின் கொடுமையை தட்டிக்கேட்கும் விதமாக இரண்டு குழந்தைகள் நாகர்கோவில் எஸ்.பி யிடம் மனு ஒன்றை கொடுத்திருக்கும் செய்தி பரப்பரப்பை ஏற்படுத்திருக்கின்றது  (தினகரன் 11.01.2011).

குழந்தைகள் இன்று முதிர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். அவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் இளம்வயதிலிருந்தே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். 

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து நல்வழிக்காட்ட வேண்டிய பெற்றோர்களின் வாழ்வும் வார்த்தையும் குழந்தைகளை எளிதில் பாதித்து விடுகின்றன.

பள்ளிச்சென்று  கற்றுக்கொள்வதை விட வீட்டின் சூழல்கள் தான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் வாய்காலாக அமைகின்றன.

குடித்து விட்டு ஆட்டம் போடும் ஒரு தந்தை தன் மகனை அல்லது மகளை அன்புச்செய்கின்றார் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.

உன் குழந்தையை, பெற்றோரை அன்புச்செய்கின்றாயா அதை செயலில் காட்டு...

செயலில் காட்டப்படாத அன்பு உண்மையான அன்பு என்று புரிந்துக் கொள்ளப்படமாட்டாது.

காதல் என்பது....Never Fall In Love But Grow in Love!

காதல் என்பது....

உலகமெல்லாம் காதலர் தினத்தை எதிர்நோக்கியிருக்கின்றன. காதலர்கள் மட்டுமல்ல காதலர் தினத்தை முன்னிட்டு வியாபாரத்தை பெருக்க காத்திருக்கும் வியபாரிகளும், ஹோட்டல் முதலாளிகளும், பிரச்சினையை கிளப்பயிருக்கும் சங்பரிவார் அமைப்புகளும் காதலர் தினத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

காதல் என்பது மனிதர்களின் இயல்பான, நல்ல உணர்வு. ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து அல்லது ஒரு பெண் ஓர் ஆணை பார்த்து பழகுவதனால் அரும்பக்கூடிய இயல்பான உணர்வு. இது தன்னலமற்றது. நிபந்தனை இல்லாதது.

16 வயதிலிருந்து 22 வயது வரை அரும்பக்கூடியது காதல் அன்று அது இனக்கவர்ச்சி (infatuation) என்று உளவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த வயதில் கூட ஓர் ஆண் பெண்ணால் கவரப்படுவதும், ஒரு பெண் ஓர் ஆணால் கவரப்படுவதும் இயல்பான இயற்கையான ஒன்று. ஆனால் இதனை காதல் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வயதில் ஏற்படுகின்ற இனக்கவர்ச்சியை காதல் என்று தவறுதலாக புரிந்துக்கொண்டு திருமணம் செய்துக்கொள்கின்றவர்களின் வாழ்வு பாதியிலேயே முடிந்து விடுகின்றது.

பார்த்தவுடன் (திரைப்படங்களில் வருவது போல) அரும்புவது காதல் அல்ல அது கவர்ச்சி. காதல் என்பது நொடிப்பொழுதில் வருவதல்ல ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆழம் பெருவது.

உண்மை காதல் ஒருவரை நிர்பந்திக்காது (எ.கா. 'அவனிடம் நீ பேசக் கூடாது')

உண்மை காதல் வர்புறுத்தாது. (எ.கா. 'நீ என்னை காதலிக்க வில்லை என்றால் நான் செத்துப் போய் விடுவேன்')

உண்மை காதல் உடல், அழகு, நிறம், சமயம், சாதி, வசதி பார்க்காது.

உண்மை காதல் பெற்றோரை ஊனப்படுத்தாது.

உண்மை காதல் பெற்றோரை உதாசினப்படுத்தாது.

உண்மை காதல் புரிந்துக்கொள்ளும். (எ.கா. ' I understand You")

உண்மை காதல் ஊக்கப்படுத்தும், உற்சாகமூட்டும.; (எ.கா. 'உன்னால் முடியும';)

உண்மை காதல் எதையும் எதிர்பார்க்காது.

உண்மை காதல் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

உண்மை காதல் இளமையில் இனிமை பெறும் முதுமையில் முழுமை பெறும்.

உண்மை காதல் மனதால் இணைவது.

உண்மை காதல் தன்னை முழுமையாக தற்கையளிப்புச் செய்யும்.
Never Fall In Love But Grow in Love!


எந்த நாடு அடிமைப்பட்டு கிடக்கின்றதோ அது என் தாய் நாடு, Egypt and Revolution

எந்த நாடு அடிமைப்பட்டு கிடக்கின்றதோ அது என் தாய் நாடு

எகிப்திய பிரச்சினை என்று பார்ப்பதை விட எகிப்திய புரட்சி என்று பார்ப்பது தான் சிறந்ததாகும். 1789 ஆம் ஆண்டு நடந்த பிரஞ்சு புரட்சிக்கு பிறகு இத்தகைய பெரிய புரட்சிகள் 21 ஆம்; நூற்றாண்டு; நாகரிக உலகில் சாத்தியம் இல்லை என்று சொன்ன வரலாறு இன்று எகிப்திய புரட்சியின் ழூலமாக புரட்சிக்கு புதிய அர்த்தத்தை தருகின்றது.

சர்வாதிகாரி முபாரக் அரசின் அதிகார அரசியல் ஆயுள் முடிவதற்கு பெரும் பங்காற்றிய பெருமை எகிப்திய சமானிய மக்களையே சாரும். ஆயுதம் தாங்கி தான் புரட்சி செய்ய முடியும் என்ற எண்ணத்தை புரட்டி போட்டு விட்டது எகிப்திய புரட்சி. அடித்தட்டு மக்களின் எழுச்சியே இன்று புரட்சியாக வெடித்துள்ளது.

இந்திய மண்ணிலும் சர்வாதிகாரத்தால் அடக்கி ஆழும் அரசுகளுக்கு எகிப்திய புரட்சி ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும்.

வெளிச்சத்திற்கு வாருங்கள்! Come and Shine

வெளிச்சத்திற்கு வாருங்கள்!

பகல் வேளையில் வெளியில் வர பயப்படுகின்ற மிருகங்கள் காடுகளில் இருளில் தான் வெளியே வந்த தங்கள் இரைகளை தேடிக்கொள்கின்றன.

இருளைக்கண்டு பயப்படுகின்ற மனிதர்களை பார்த்திருக்கின்றோம். ஆனால் வெளிச்சத்தை கண்டு பயப்படுகின்ற மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?

'வெளிச்சம் எனக்கு ஆகாது! வெளிச்சத்தில் வந்தால் என் உண்மை உருவம், என் சுயம் பிறருக்கு தெரிந்து விடும். நான் என்னையே பிறருக்கு வெளிப்படுத்த  பயப்படுகின்றேன்' என்று உணரக்கூடிய மனிதர்கள் இன்று பலர் உண்டு.

இத்தகைய உணர்வு நிலையைக் கொண்ட மனிதர்கள் தங்களையே சிறு கூண்டிற்குள் அடைத்துக்கொள்வார்கள். தங்களையே இழிவாக நினைப்பார்கள். பகலில் தான் தொலைத்த சுயத்தை, தான்மையை இருளில் தேடிக்கொண்டிருப்பார்கள்.

வெளிச்சத்திற்கு வாருங்கள்! நீங்கள் இருளின் மக்கள் அல்ல ஒளியின் மக்கள். உங்கள் சுயம் நல்லதே. நீங்கள் மாண்புடையவர்களே.

நீங்கள் உங்கள் நிறம், செல்வம், பட்டம், பதவி அல்ல. நீங்கள் ஒளியின் மக்கள். உங்கள் ஆளுமையே உங்களை ஆக்குகின்றது. இருளை வலிந்து பற்றிக்கொண்டிருப்பதை விட, இருளை பழிப்பதை விட, உண்மை ஒளியை உங்கள் உள்ளத்தில் ஏற்றுங்கள். இருள் தானாக அகன்று போகும். எனவே இருளைக் கண்டு பயம் வேண்டாம் வெளிச்சத்திற்கு வந்தாலே போதும்.

உணர்வுகளும் நானும், Feelings and Me


உணர்வுகளும் நானும்


மனிதர்களை ஆக்குவதே உணர்வுகள் தான். உணர்வுகளை மறுத்த சமயமும்; உறவுகளை வெறுத்த அருள்வாழ்வும் ஆன்மீகமாகாது.

அழுவாரோடு அழுவதும், மகிழ்வாரோடு மகிழ்வதுமே உணர்வின் சரியான சமமான வெளிப்பாடாகும்.

கோபம், வருத்தம், மகிழ்ச்சி, துயரம், அழுகை, கவலை, சிரிப்பு, வலி, துயரம், காதல், பாசம், இப்படியாக அனைத்து உணர்வுகளும் நல்லதே.

உணர்வுகள் ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். உணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பது ஆபத்திற்கு அழைத்துச்செல்லும். உணர்வுகளை கட்டாயப்படுத்துவது என்பது ஆளுமை சிதைவுக்கு வழிவகுக்கும். 

உணர்வுகளை உள்ளுர உணர்வதே வாழ்வின் ஆழத்திற்கு அழைத்துச்செல்லும்.


எனக்கு கோபம் வருகின்றபோது என்ன செய்வது என்று தெரியாமலே தீய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு பதிலாக எனக்கு கோபம் வருகின்ற போது நான் கோபப்படுகின்றேன் என்ற உள்ளுர உணர்வு எனக்கு இருந்தாலே கோபம் சரியாக கையாளப்படும்.

இப்படி ஒவ்வொறு உணர்வுகளையும் உள்ளுர உணர்தலே சரியாக உணர்வுகளை கையாளுவதற்கான முறையாகும்.

உணர்வுகள் ஊமையானால் உறவுகள் பொய்த்துவிடும். உண்மைகளே உணர்வானால் உறவுகள் மொட்டவிழ்க்கும்.


நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! Corruption can Never be Compromised

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
 

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசாவின் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அடுத்து அவர் கைது செய்த நிகழ்ச்சி பலருக்கு மகிழ்ச்சியாகவும் வேறு பலருக்கு வீழ்ச்சியாகவும் இருக்கின்றது.

ராசாவின் கைதை கொண்டாடியவர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.  வேறு சிலர் ராசாவின் கைதுக்கு பேரூந்துகளை கொளுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டும் துக்கம் அனுசரித்தார்கள்.

செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டப் போது மாணர்களின் பேரூந்து ஒன்று எரிக்கப்பட்டதும் அதற்கு பல மாணவிகள் பலியானதும் நாம் அறிந்ததே.

கர்னடாகாவில் எடியூரப்பாவின் மேல் கூறப்பட்ட ஊழல் குற்றங்களின் மேல் விசாரணை நடத்தலாம் என்று கூறிய ஆளுனருக்கு எதிராக போராட்டம் நடத்த முன்வருபவர்களை என்னவென்று சொல்ல. உறவுக்கு துணை போகலாம் ஊழலுக்கு துணை போகலாமா.

ராசா தலித் என்பதற்காக அவர் செய்த குற்றங்களை நியாயப்படுத்த முடியாது. விடுதலை சிறுத்தைகளின் ராசாவுக்கான ஆதரவு போராட்டங்கள் விடுதலை சிறுத்தைகளின் கொள்கையற்ற போக்கினை பளிச்சிடுகின்றன.

ஊழல் குற்றச்சாட்டிலிருந்து ராசாவை பாதுகாக்க அவருக்காக வாதாடிய, அல்லும் பகலும் போராடிய கட்சிகள் இன்று விழி பிதுங்கி நிற்கின்றன.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....

ராமனானாலும் ராவணனாலும் குற்றமெனில் அவன் தண்டனைக்கு உரியவனே...