வெளிச்சத்திற்கு வாருங்கள்!
பகல் வேளையில் வெளியில் வர பயப்படுகின்ற மிருகங்கள் காடுகளில் இருளில் தான் வெளியே வந்த தங்கள் இரைகளை தேடிக்கொள்கின்றன.
இருளைக்கண்டு பயப்படுகின்ற மனிதர்களை பார்த்திருக்கின்றோம். ஆனால் வெளிச்சத்தை கண்டு பயப்படுகின்ற மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?
'வெளிச்சம் எனக்கு ஆகாது! வெளிச்சத்தில் வந்தால் என் உண்மை உருவம், என் சுயம் பிறருக்கு தெரிந்து விடும். நான் என்னையே பிறருக்கு வெளிப்படுத்த பயப்படுகின்றேன்' என்று உணரக்கூடிய மனிதர்கள் இன்று பலர் உண்டு.
இத்தகைய உணர்வு நிலையைக் கொண்ட மனிதர்கள் தங்களையே சிறு கூண்டிற்குள் அடைத்துக்கொள்வார்கள். தங்களையே இழிவாக நினைப்பார்கள். பகலில் தான் தொலைத்த சுயத்தை, தான்மையை இருளில் தேடிக்கொண்டிருப்பார்கள்.
வெளிச்சத்திற்கு வாருங்கள்! நீங்கள் இருளின் மக்கள் அல்ல ஒளியின் மக்கள். உங்கள் சுயம் நல்லதே. நீங்கள் மாண்புடையவர்களே.
நீங்கள் உங்கள் நிறம், செல்வம், பட்டம், பதவி அல்ல. நீங்கள் ஒளியின் மக்கள். உங்கள் ஆளுமையே உங்களை ஆக்குகின்றது. இருளை வலிந்து பற்றிக்கொண்டிருப்பதை விட, இருளை பழிப்பதை விட, உண்மை ஒளியை உங்கள் உள்ளத்தில் ஏற்றுங்கள். இருள் தானாக அகன்று போகும். எனவே இருளைக் கண்டு பயம் வேண்டாம் வெளிச்சத்திற்கு வந்தாலே போதும்.