விடிந்தப் பிறகும் தூக்கம் ஏன்?
'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு', என்று பாடினான் பாரதி. வாணிபம் சார்பாக வெளி நாடுகளுக்கு சென்று வருவது நம் தமிழ் பாரம்பரியத்திற்கு ஒன்றும் புதிதல்ல. வெளி நாட்டையும் அவர்களின் கலாச்சாரத்தையும் கேலி கிண்டல் செய்வதற்கு பதிலாக வெளி உலகில் இருக்கின்ற தரமான இலக்கியங்களை, பழக்க வழக்கங்களை ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்த்து நம் கலாச்சார சூழலுக்கு ஏற்ற விதத்தில் மறு வாசிப்பு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
வெளி நாட்டின் இலக்கிய வளங்களை, வாழ்க்கை முறைகளை திறனாய்வு கண்ணோட்டத்தோடு பார்ப்பதை விட்டு விட்டு வெளி நாட்டு கலாச்சாரத்தினை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது அடி முட்டாள் தனமாகும்.
இந்தியா ஒரு வெப்ப நாடு என்பது யாவரும் அறிந்ததே. இந்த எரியும் வெப்பத்தில் கூட குளிர் கால வெளிநாட்டு ஆடைகளை (Over Coat, shoes, Jeans) நாகரிகத்தின் மொத்த அடையாளங்களாக ஏற்றுக்கொள்வது என்பது அடி முட்டாள் தனம் தானே.
இதேப் போன்று உணவு வகை தொடங்கி உறவு முறை வரை அன்னிய கலாச்சாரம் நம் அண்மையிலேயே வீடுக்கட்டி உல்லாசமாய் படுத்துக்கிடக்கின்றது. நாம் இந்த வீட்டின் வெளியே நிர்வாணமாய் விடிந்தப்பிறகும் தூங்கிக் கிடக்கின்றோம்.
பொழுது விடிந்து விட்டது. நாம் விழித்திருக்கப் போவது எப்போது?