டிஜிட்டல் சுனாமி
உலகத்தினை உள்ளங்கையிலே வைத்து பார்க்கும் பேறு இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் கண்டிராத கேள்விப்படாத உயர்தர டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் நம் இளைஞர்களின் அன்றாட பழக்கவழக்கங்களாகி விட்டன. நகரத்து இளைஞர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதப்பட்ட டிஜிட்டல் யுகம் கிராமத்து மூலை முடுக்குகளிலும் பேரொலியாய் ஒலிக்க தொடங்கி விட்டன. இன்று இந்த டிஜிட்டல் தொழில் நுட்பங்களையும் இளைஞர்களையும் பிரித்து பார்ப்பது என்பது இயலாத ஒன்று.
Computer, Cell Phone, I-Pod, I-Pad, Laptop, LCD, LED, Web Cam, என்று ஊடகத்துறையில் தொழில் நுட்ப புரட்சி உலக சந்தையில் சக்கைப் போடு போடுகின்றது. 80 சதவிகித இளையோரே இதன் ஒட்டு மொத்த நுகர்வோராக இருக்கின்றனர். இளைஞர்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் இந்த டிஜிட்டல் சுனாமிக்கு பலியாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
ஊடகத்துறையில் பல தொழில் நுட்பங்கள் சந்தையில் வந்தப்பிறகு இணையத்தின் அசூரத்தனமான வளர்ச்சி வியப்பை ஏற்படுத்துகின்றது. இணையத்தினை ஒரு வழுக்குப்பாறை எனலாம். சரியான புரிதல் இல்லாத இளைஞர்களை இது எளிதில் வழுக்கி விழச்செய்யும்.