வாக்கு போடவா! தூக்கு போடவா !
தேர்தல் காய்ச்சல் தொற்றிக் கொண்டு விட்டது. கட்சி அரசியல் பேச்சு வார்த்தைகள், குரங்கு தாவல்கள் எல்லாம் ஒரு விதத்தில் முடிவிற்கு வந்துக் கொண்டிருக்கின்றன.
தேர்தலின் போது நான்கு வித நிலைப்பாடுகளை கொண்ட மக்களை நாம் காண முடியும்.
1. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை கொண்ட மக்கள்.
2. திருடர்களையும் ஊழல் பெருச்சாளிகளையும் தேர்ந்தெடுக்க ஏன் வாக்களிக்க வேண்டும் எனும் மனநிலைக் கொண்ட மக்கள்.
3. கொள்கை இல்லாமல் பணத்துக்கும் சலுகைக்கும் ஆசைப்படும் மக்கள்.
4. கொள்கையினை உயிர் மூச்சாக கொண்டு சிறந்த தலைவர்களை தெளிந்து தேர்ந்தெடுப்பவர்கள்.
தேர்தலை சரியாக ஜனநாயக முறையில் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருந்தாலும் தேர்தலில் ஜனநாயக கடமையாற்றுவது மக்களின் கடமையாகும்.
இது வரை 57 சதவிகிதம் தான் மக்களவை தேர்தலின் உச்சக் கட்ட வாக்கு பதிவாக இருந்திருக்கின்றது.
மீதமுள்ள 43 சதவிகிதம் மக்கள் ஜனநாயகத்தை புறக்கணித்திருக்கின்றார்கள், தங்கள் உரிமையை மறுத்திருக்கின்றார்கள்.
இதனால் தான் ஊழல் பெருச்சாளிகளும், திருடர்களும், ரவுடிகளும் நாட்டை ஆளக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த 43 சதவிகிதத்தினரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியிருப்பார்கள் என்றால் இந்த நிலை வந்திருக்காது.
நல்லாட்சி அமைய, மக்கள் கவலையில்லாமல் வாழ, மனிதம் மலர, பொருளாதாரம் சிறக்க, மானுடம் காக்கப்பட நல்லவர்களை, கொள்கைவாதிகளை தேர்ந்தெடுப்பீர்!
வாக்கு போட தவறுவது என்பது தனக்கு தானே தூக்குப் போட்டுக்கொள்வதற்கு சமமானது.